Monday, April 4, 2011

"ரிமோட் கன்ட்ரோல்' மூலம் இயங்கும் செயற்கை மேகம்"

விளையாட்டு மைதானங்களை குளிர்ச்சியாக வைத்திருப்பதற்காக, செயற்கை மேகத்தை கல்லூரி பேராசிரியர் ஒருவர் உருவாக்கியுள்ளார். 

இந்த செயற்கை மேகம், 2022ல் நடக்க உள்ள உலக கோப்பை கால்பந்து போட்டியில் பயன்படுத்தப்பட உள்ளது. கத்தார் பல்கலைக்கழகத்தில், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறை பேராசிரியராக பணியாற்றி வருபவர் சாவூத் அப்துல் கனி. 

இவரது தலைமையிலான விஞ்ஞானிகள் குழுவினர், திறந்தவெளி விளையாட்டு மைதானங்களில், வெயில் மற்றும் வெப்பத்தை தடுத்து, குளுமையாக வைத்திருப்பதற்காக, செயற்கை மேகத்தை உருவாக்கி வருகின்றனர். 

இது குறித்து, சாவூத் அப்துல் கனி கூறியதாவது: திறந்தவெளி விளையாட்டு மைதானங்களில், வெயிலை தடுப்பதற்காக, செயற்கை மேகத்தை உருவாக்கி வருகிறோம். இது, 100 சதவீத கார்போனிக் பொருட்களாலானது. 

இந்த செயற்கை மேகத்தை, "ரிமோட் கன்ட்ரோல்' மூலம் இயக்க முடியும். இதனால், நாம் விரும்பும் இடத்தில், இந்த மேகத்தை நகர்த்தி வைத்து கொள்ளலாம். 2022ம் ஆண்டில், தோகா நாட்டில் நடக்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் போது, இந்த செயற்கை மேகம் பயன்படுத்தப்பட உள்ளது. 

மேலும், கடற்கரை, கார் நிறுத்துமிடங்கள் போன்ற இடங்களில் பயன்படுத்தும் விதத்தில், செயற்கை மேகங்களை உருவாக்கி வருகிறோம். இதை, மொபைல் போன்கள் மூலம் இயக்கலாம். 

இதன் துவக்க விலை, 23 லட்ச ரூபாய். எனினும், இது விற்பனைக்கு வரும் போது, இதன் விலை, கூடவோ, குறையவோ செய்யலாம். இவ்வாறு சாவூத் அப்துல் கனி கூறினார்.

0 comments:

Post a Comment