Thursday, October 20, 2011

இந்திய விசாரணைகளில் குறிவைக்கப்படும் முஸ்லிம்கள் – நீதிபதி மார்கண்டேய கட்ஜு .

புதுடெல்லி:இந்தியாவில் எங்கு குண்டு வெடிப்பு நடந்தாலும் காவல்துறை முஸ்லிம்களை வேண்டுமென்றே சம்பந்தப்படுத்துவதாக சமீபத்தில் பணி ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி காவல்துறையை கடுமையாக விமர்சித்துள்ளார்.
கடந்த மாதம் உச்சநீதிமன்றத்தில் இருந்து பணி ஓய்வு பெற்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு இந்திய காவல்துறை தடயவியல் துறையில் மிகவும் குறைந்த அளவே பயிற்றுவிக்கப்படுவதால் தீவிரவாத தாக்குதல்கள் தொடர்பான வழக்குகளை முடிக்கமுடியாமல் திணறுகின்றனர் என்று கூறியுள்ளார்.
மேலும் அவர்கள் உண்மையான குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் சந்தேகிக்கும் நபரை கைது செய்து அவர்களின் மீது அவ்வழக்குகள் திணிக்கப்படுவதாக பத்திரிக்கைக்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.
மேலும் குண்டு வெடிப்புகளை ஆய்வு செய்ய போதுமான பயிற்சியும் அறிவியல் சாதனங்களும் இல்லாததால் அவர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் செயல்படுகின்றனர் என்றும் எங்கு குண்டு வெடிப்பு நிகழ்ந்தாலும் அங்கு வசிக்கும் முஸ்லிம் இளைஞர்கள் மீது குற்றம் சுமத்தி அவர்களை கைது செய்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.
மேலும் பெங்களுர் தகவல் தொழிற்நுட்ப வளாகத்தில் நடந்த குண்டு வெடிப்பு, வாரணாசி, புனே, மும்பை மற்றும் சமீபத்தில் நடந்த புது தில்லி குண்டு வெடிப்பு ஆகிய குண்டு வெடிப்புகளையும் சேர்த்து கடந்த இரண்டு ஆண்டுகளில் நிகழ்ந்துள்ள அனைத்து குண்டு வெடிப்புகளிலும் இன்னும் குற்றவாளிகள் யார் என்று கண்டுபிடிக்கப் படவில்லை என்றும் கூறியுள்ளார்.
மேலும் கட்ஜு கூறியதாவது; ‘கைது செய்யப்பட முஸ்லிம்கள் குற்றத்தை ஒப்புகொள்ள கடுமையான தாக்குதல்களுக்கு உள்ளாகின்றனர் என்று கூறியுள்ள அவர் குறிப்பாக கிராமப் புறங்களில் பணி புரியும் காவல்துறையினர் குற்றம் நடந்தவுடன் தாங்கள் உடனடியான குற்றவாளியை கைது செய்ததாக காட்டிகொள்வதற்காக இது போன்ற தவறுகளில் அதிகம் ஈடுபடுகின்றனர் என்றும் கூறினார்.
கடந்த 2006 -ஆம் ஆண்டு நிகழ்ந்த குண்டு வெடிப்பில் குற்றவாளி என்று கைது செய்யப்பட்டு நான்கரை ஆண்டுகள் கழித்து குற்றம் அற்றவர் என்று விடுதலையாகி இருக்கும் கஷ்மீரை சேர்ந்த இளைஞர் இம்ரான் கிர்மானிக்கு ஏற்பட்டிருக்கும் நீதி மறுப்பே இதற்கு சிறந்த உதாரணம் ஆகும் என்றும் கூறினார்.
மார்கண்டேய கட்ஜு தற்போது இந்திய பத்திரிக்கை கழகத்தின் தலைவராக உள்ளார். மேலும் உண்மையான குற்றவாளிகள் சட்டத்தின் முன் கொண்டு வரப்பட்டால் தாம் மரண தண்டனைக்கு ஆதரவு தெரிவிப்பேன் என்று கூறினார். மேலும் இவர் தலைமை நீதிபதியாக இருக்கும்போது அப்பாவி நபரை காவல்துறை என்கவுண்டர் என்ற பெயரில் கொலை செய்தால் அவர்களுக்கு மரணதண்டனை வழங்க வேண்டும் என்று கூறியவர் என்பதும் மற்றும் கௌரவ கொலைகளுக்கு மரணதண்டனை வழங்க வேண்டும் என்று கூறியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment