Sunday, October 23, 2011

மதுரையில் துப்பாக்கியால் சுட்டு பெண் போலீஸ் தற்கொலை: உருக்கமான கடிதம் சிக்கியது

மதுரையில் துப்பாக்கியால் சுட்டு, பெண் போலீஸ் தற்கொலை செய்து கொண்டார். அவர் கைப்பட எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது. மதுரை, நரிமேட்டில் உள்ள பிரசாத் ரோடு பகுதியை சேர்ந்தவர் மொக்கராஜ். இவரது மகள் மீனாட்சி (வயது 25), இவர் மதுரை ஆயுதப்படை பிரிவில் பெண் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தார். கடந்த சில வாரங்களாக மீனாட்சிக்கு இரவு பணி கொடுக்கப்பட்டிருந்தது.

நேற்று மீனாட்சிக்கு மதுரை அண்ணாநகரில் உள்ள ஒரு வங்கியின் பண பெட்டகத்துக்கு பாதுகாப்பு வழங்கும் பணி கொடுக்கப்பட்டிருந்தது. அதன்படி அந்த வங்கியில் மீனாட்சி உள்பட 5 போலீசார் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். நள்ளிரவில் 1 1/2 மணியளவில் வங்கியில் இருந்த ஒரு தனி அறைக்கு மீனாட்சி சென்றார். பாதுகாப்பு பணி என்பதால் மற்ற போலீசாருக்கு அவர்மீது சந்தேகம் வர வில்லை. தனியறைக்கு சென்ற மீனாட்சி, தான் வைத்திருந்த துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். தாடையில் துப்பாக்கி முனையை வைத்து சுட்டதால் அவரது முகம் சிதைந்து போனது.

துப்பாக்கி சத்தம் கேட்டதும் அதிர்ச்சி அடைந்த மற்ற போலீசார் அங்கு சென்று பார்த்ததில் மீனாட்சி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீஸ் துணை கமிஷனர் திருநாவுக்கரசு மற்றும் போலீசார் மீனாட்சியின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் மீனாட்சி தற்கொலை செய்து கொண்ட அறையில் அவரது அருகே ஒரு கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர்.

அதில் எழுதியிருப்பதாவது:- எனக்கு தீராத தலை வலியும், குடும்ப பிரச்சினைகளும், பணிசுமைகள் போன்ற காரணத்தால் இந்த முடிவை எடுத்துள்ளேன். இதற்கு வேறு எந்த காரணத்தையும் புகுத்த வேண்டாம்.நான் எடுத்த முடிவு தப்புதான். கடவுள் கொடுத்த உயிரை எடுக்க எனக்கு உரிமை இல்லை. இறைவா! என்னை மன்னித்துவிடு. இந்த சாவுக்கு யாரும் காரணம் இல்லை. இந்த முடிவுக்கு வேறு யாருக்கும் பொறுப்பு இல்லை என்று அதில் கூறப்பட்டு இருந்தது.

இதுகுறித்து அண்ணாநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து காரணத்தை விசாரித்து வருகின்றனர். மீனாட்சி கடந்த 1 1/2 மாதங்களுக்கு முன்புதான் கரூரில் இருந்து மதுரைக்கு பணியிடமாற்றம் பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

0 comments:

Post a Comment