Wednesday, October 26, 2011

சவூதி: 'சம்பளம்' தாய்நாட்டுக்கு அனுப்புவதில் தொழிலாளர் நலத் துறை அமைச்சகம் 'கெடுபிடி' ?

சவூதி அரபிய நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், வெளிநாட்டினர் தங்கள் சம்பளத்தை 'அப்படியே' தாயகம் அனுப்புவதில் கட்டுப்பாடு ஏற்படுத்த சவூதி தொழிலாளர் நல அமைச்சகம் தீர்மானித்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. 
இந்த அறிவிப்பின்படி வாங்கும் சம்பளத்தில் 'குறிப்பிட்ட சதவிகிதம்' மட்டுமே தாயகம் அனுப்ப அனுமதிக்கப்படும் என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஆதில் ஃ பக்கீஹ் தெரிவித்துள்ளதாக அல் அரேபியா செய்தி வெளியிட்டுள்ளது. (கடாஃபி கால லிபியாவில் சுமார் 35 -40 சதவிகிதமளவு சம்பளத்தை லிபியாவிலேயே செலவிடும்படி, வெளிநாட்டவர்கள் பணிக்கப்பட்டிருந்தனர் என்பது இங்கு நினைவு கூறத்தக்கது)

"பத்துக்கு ஒன்பது வீதத்தில் வெளிநாட்டவர்களே தொழிலாளர்களாக உள்ள இந்த நாட்டில், பெருமளவு பணம் வெளியே செல்வதால், உள்நாட்டுப் பொருளாதாரம் பாதிப்படைகிறது" என்று அமைச்சர் கூறியிருக்கிறார்.

கடந்த 2010 ஆம் ஆண்டில்,அயல்நாடுகளுக்கு அந்தந்த நாட்டுத் தொழிலாளர்கள் அனுப்பிய தொகை சுமார் 98.2 பில்லியன் ரியால்களாகும். 2005 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இது இரண்டு மடங்காகும் என்று சவூதி அரேபிய பண நிறுவனத் (SAMA) தகவல் ஒன்று கூறுகிறது.

அதிக அளவு பணம் வெளியாகும் நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்த நிலையில் சவூதி அரேபியா உள்ளது என்று உலகவங்கியின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. மேலும், உலகளவில், அந்நிய செலாவணி அனுப்பப்பட்டதில் ஒட்டு மொத்தமாக, கடந்த ஆண்டு 2.44 சத வளர்ச்சி இருந்தது என்றால், வளைகுடா நாடுகளில் இவ்வளர்ச்சி விகிதம் 6.1 சதமாக உள்ளது.

அதிக அளவு அந்நியச் செலாவணி பெறும் நாடுகளில் $ 55 பில்லியன் டாலர்களுடன் இந்தியா முதல்நிலை வகிக்கிறது. இவற்றுள் 30 சதவிகிதம் வளைகுடா நாடுகளிலிருந்து அனுப்பப்படுவதாகும்.

0 comments:

Post a Comment