இதோ! விபச்சாரத்தில் ஈடுபட்டுக் கர்ப்பம் தரித்த மதீனத்து மாது ஒருத்தி, செய்த குற்றத்தை ஒப்புக்கொள்கிறாள். அதற்கான தண்டனையைத் தாருங்கள் என்று கேட்கிறாள். என்ன தண்டனை? அதனை நன்றாகத் தெரிந்து கொண்டுதான் கேட்கிறாள். திருமணமானவர்கள் விபச்சாரம் செய்துவிட்டால் கல்லால் அடித்துக் கொல்ல வேண்டுமென்பதுதான் அது! அந்தத் தண்டனையைத்தான் தேடி வருகிறாள். தண்டனை பெற்றால்தான் இறைவன் அக்கொடிய பாவத்தை மன்னிப்பான் எனும் உறுதியுடன் வருகிறாள். இஸ்லாத்தின் வரலாற்றைத் தவிர வேறெங்கும் இதற்கு நிகரான நிகழ்ச்சியை நாம் காண்பது அரிது!
இம்றான் ஹுஸைன்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ”ஜுஹைனா என்ற குலத்தைச் சேர்ந்த ஒருபெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் வந்தாள். அவள் விபச்சாரத்தில் ஈடுபட்டதினால் கருவுற்றிருந்தாள். அவள் சொன்னாள்: அல்லாஹ்வின் தூதரே! நான் தண்டனை பெறும் அளவுக்குத் தவறு செய்து விட்டேன். என் மீது தண்டனை நிறைவேற்றுங்கள்.
நபி(ஸல்) அவர்கள் அந்தப் பெண்ணின் பொறுப்பாளரை அழைத்தார்கள். அவரிடம் சொன்னார்கள்: நீர் இவளிடம் மிகவும் நல்ல முறையில் நடந்து கொள்ளும். குழந்தை பெற்றெடுத்ததும் இவளை என்னிடம் அழைத்து வாரும்.
அவ்வாறே அவளுக்குக் குழந்தை பிறந்ததும் அவளை நபியவர்களிடம் அழைத்து வந்தார் அவர். அவளது விஷயத்தில் நபி(ஸல்) அவர்கள் கட்டளை பிறப்பித்தார்கள். அவள் மீது அவளுடைய ஆடைகள் கட்டப்பட்டன. பிறகு கல்லெறிந்து அவளைக் கொல்லுமாறு நபியவர்கள் கட்டளையிட்டார்கள். அவ்வாறே செய்யப்பட்டது. பிறகு நபியவர்கள் அந்தப் பெண்ணுக்கு ஜனாஸா தொழுகை நடத்தினார்கள்.
அப்பொழுது உமர்(ரலி)அவர்கள் கேட்டார்கள்: அல்லாஹ்வின் தூதரே! இவள் விபச்சாரம் செய்தவளாயிற்றே! இவளுக்காகவா நீங்கள் ஜனாஸா தொழுகை நடத்துகிறீர்கள்?
அதற்கு நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்: இந்தப் பெண்மணி தேடிக் கொண்டது எத்தகைய பாவமீட்சியெனில், அதனை மதீனத்து முஸ்லிம்களில் எழுபது பேருக்குப் பங்கீடு செய்தால் அவர்கள் அனைவருக்கும் அது போதுமாகி விடுமே! அல்லாஹ்வின் வழியில் தனது உயிரையே இவள் ஈந்து விட்டாளே! இதனைவிடவும் சிறந்த நிலையொன்றை நீர் கண்டுள்ளீரா என்ன? ” நூல்: முஸ்லிம்
0 comments:
Post a Comment