Sunday, January 15, 2012

ரவுடியான இஸ்ரேலை அரவணைக்காதீர்கள் - இந்திய அரசிடம் வேண்டுகோள்


தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையை பலப்படுத்த வேண்டும் என்ற பெயரால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இஸ்ரேலுடன் ஒப்பந்தம் செய்துள்ளதை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டித்துள்ளது. இதுத்தொடர்பாக அவ்வமைப்பின் தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“சர்வதேச அளவில் தீவிரவாத செயல்களுக்கு ஊற்றுக்கண்ணாக விளங்கும் இஸ்ரேலுடன் இத்தகைய ஒப்பந்தம் செய்திருப்பது கேலிக்கூத்தானது. துரதிர்ஷ்டவசமாக நமது அரசு அமெரிக்கா மற்றும் அதன் நெருங்கிய கூட்டாளியான இஸ்ரேலின் மோசமான கொள்கையை செயல்படுத்தும் கருவியாக செயல்பட்டு வருகின்றது.

இந்தியா-இஸ்ரேலின் கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இஸ்ரேல் தூதரகம் பெங்களூரில் திறக்கப்படும் என்ற முடிவு தேச நலனிற்கு ஊறு விளைவிக்கக் கூடிய ஒன்றாக பாப்புலர் ஃப்ரண்ட் கருதுகின்றது.

மதவாதம் மற்றும் பயங்கரவாதத்தை கொள்கையாக கொண்டு செயல்பட்டு வரும் இந்துத்துவ பாசிஸ்டுகளின் கையில் சிக்குண்டு கிடக்கும் மாநிலமான கர்நாடகாவில் இஸ்ரேலிய தூதரகம் அமையவிருப்பது பாசிஸ்டுகளுக்கு மேலும் ஊக்கத்தை கொடுக்கும்.

சியோனிச தீவிரவாத கொள்கைகளை தீவிரமாக பின்பற்றி வரும் நாடான இஸ்ரேல்தான் நவீன கால தீவிரவாதத்திற்கு வித்திட்டு வருகின்றது என்பதை நாகரீக உலகில் உள்ள அனைவரும் அறிவர். குறிப்பாக கடந்த 60 ஆண்டுகளாக சியோனிச தீவிரவாதத்தால் பாதிப்பிற்குள்ளாகி வரும் ஃபலஸ்தீன மக்கள் இஸ்ரேலின் தீவிரவாதத்தை குறித்து நன்கு அறிவர்.

இஸ்ரேல் தனது தூதரகத்தை இந்தியாவில் டெல்லியிலும், இந்தியா இஸ்ரேலிய தலைநகர் டெல்அவீவிலும் 1992-ஆம் ஆண்டு பரஸ்பரம் துவக்கினர். இந்தியாவில் இஸ்ரேலிய தூதரகம் துவங்கப்பட்ட(1992க்கு) பின்புதான் நாட்டில் தொடர் குண்டு வெடிப்புகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

பல வருடங்களாக இந்தியா ஃபலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டுடன் செயல்பட்டு வருகின்றது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா தனது கணக்கை துவக்கியதிலிருந்து ஃபலஸ்தீன ஆக்கிரமிப்பு பகுதியில் இஸ்ரெல் இழைத்து வரும் அக்கிரமங்களை எதிர்த்து எடுக்கப்படும் தீர்மானங்களில் இந்தியா தன்னையும் இணைத்துக் கொண்டுள்ளது.

மகாத்மா காந்தி சொன்னது போன்று எப்படி இங்கிலாந்து – ஆங்கிலேயர்களுக்கு சொந்தமோ அது போன்று ஃபலஸ்தீன் ஃபலஸ்தீனர்களுக்கே என்ற நிலைப்பாட்டில் தாங்கள் நிலைத்திருப்போம் என ஐக்கிய முற்போக்கு கூட்டணி பல தருணங்களில் உறுதிப்படுத்தியுள்ளது.

ஃபலஸ்தீனை பிரிக்கக்கூடிய விவகாரத்தில் இந்தியா எப்போதுமே எதிர்கருத்தைத் தான் கொண்டுள்ளது. மேலும் யூதர்கள் மற்றும் ஃபலஸ்தீனர்களுக்கு சமமான அரசியல் உரிமையை வழங்கும் ஒரு தேச கொள்கையிலும் இந்தியா உறுதியாக இருந்து வந்துள்ளது.

ஜவஹர்லால் நேருவின் காலம் தொட்டு ராஜீவ்காந்தி காலம் வரை இதுதான் நம்முடைய கொள்கையாக இருந்து வந்தது.

எனவே, ஃபலஸ்தீன மக்களின் துயரங்களோடு நாங்களும் இருக்கின்றோம் என்பது போன்று காட்டிக்கொண்டு மறுபுறம் ரவுடி நாடான இஸ்ரேலை அரவணைக்கும் நயவஞ்சக போக்கினை இந்தியா உடனடியாக கைவிடவேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை கேட்டுக்கொள்கின்றது.” இவ்வாறு இ.எம்.அப்துற்றஹ்மான் கூறியுள்ளார்.
thanks to yarlmuslim

0 comments:

Post a Comment