
கடந்த நவம்பரில் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா நிகழ்த்திய உரையில், அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை தற்போது ஆசியா நோக்கி திரும்பியிருப்பதாக வெளிப்படையாக அறிவித்தார். வடக்கு ஆஸ்திரேலியாவிலுள்ள டார்வின் துறைமுகத்தில் அமெரிக்கப் படைகள் நிலைகொள்ளும் என்றும், அத்துடன் ஆஸ்திரேலியாவின் இதர விமான மற்றும் கடற்படைத் தளங்களை அமெரிக்க இராணுவம் அதிகமாகப் பயன்படுத்தும் என்றும் அறிவித்துள்ளார். இது, ஆசியாவில் வியட்நாம் போருக்குப் பின்னர் அமெரிக்க இராணுவத்தின் குறிப்பிடத்தக்க விரிவாக்கமாகும்.
மேற்குலக நாடுகளுடனான சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி பெரும்பாலும் மலேசியாவின் மலாக்கா நீரிணை (ஜலசந்தி) வழியாகவே நடைபெறுகிறது. குறிப்பாக,மேற்காசியா மற்றும் ஆப்பிரிக்காவிலிருந்து சீனா இறக்குமதி செய்யும் எண்ணெய், மலாக்கா நீரிணை வழியாகக் கப்பல் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. குறுகிய பாதை கொண்ட மலாக்கா நீரிணை வழியே பெரிய கப்பல்கள் செல்ல முடியாத நிலையில், இன்னும் ஆழமான சுந்தா நீரிணை வழியாகத்தான் செல்ல வேண்டியிருக்கும். வடக்கு ஆஸ்திரேலிய நகரமான டார்வின் இந்த நீரிணைகளுக்கு அருகாமையில் உள்ளதால்தான், அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்காக இந்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, இந்தியப் பெருங்கடலில் உள்ள ஆஸ்திரேலியாவின் கோகோஸ் தீவுகள் மற்றும் கிறிஸ்துமஸ் தீவுகளிலும் விமானத் தளங்களை அமைக்கும் திட்டம் அமெரிக்காவிடம் உள்ளது.மலாக்கா வழியாகக் கப்பல்கள் மூலம் தென்சீனக் கடல் பகுதிக்கு எண்ணெயைக் கொண்டுசெல்ல ஏறத்தாழ 1200 கி.மீ. சுற்றிக் கொண்டு செல்ல வேண்டியிருப்பதாலும், அமெரிக்காவுடன் மோதல் போக்கை தவிர்க்கும் நோக்கத்துடனும், மலாக்கா நீரிணையை மட்டும் சார்ந்திராமல் தரை வழியேயும் எண்ணெயைக் கொண்டு செல்ல சீனா முயற்சிக்கிறது. இதற்காக, வங்காள விரிகுடாவின் மேற்குப் பகுதியிலுள்ள தனது நட்பு நாடான மியான்மரின் (பர்மாவின்) கியாவ்க்பியூ துறைமுகத்தில் எண்ணெயை இறக்கி, அங்கிருந்து தரைவழியாக சீனாவின் யுன்னான் மாகாணத்திலுள்ள குன்மிங் வரை கொண்டு செல்ல தரைவழி எண்ணெய்க் குழாயை சீனா பதித்து வருகிறது. 2013இல் நிறைவேறவுள்ள சீனாவின் இப்பெருந்திட்டத்தைத் தடுத்து நிறுத்தும் நோக்கத்தோடு மியான்மரைத் தன் பிடியில் விரைவாகக் கொண்டுவர அமெரிக்கா கிளம்பியுள்ளது.
கடந்த டிசம்பர் மாதத் தொடக்கத்தில் அமெரிக்க அரசுச் செயலரான ஹிலாரி, மியான்மருக்குப் பறந்து சென்று எதிர்க்கட்சித் தலைவி ஆங் சான் சூ கியையும், அந்நாட்டின் அதிபர் தியன் சியன்ஐயும்சந்தித்தார். 50ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு உயர்மட்ட அமெரிக்க அரசுச் செயலர் மியான்மருக்கு வருவது இதுவே முதன் முறையாகும்.

ஹிலாரியின் பயணத்துக்குப் பின்னர், இப்போது மியான்மர் மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்காவும் மேற்கத்திய ஏகாதிபத்தியங்களும் அகற்றியுள்ளன. இதனால் மேற்கத்திய ஏகாதிபத்தியங்களின் முதலீடுகள் மட்டுமின்றி, இந்தியக் கார்ப்பரேட் நிறுவனங்களின் முதலீடுகளும் மியான்மரில் பெருக வாய்ப்புள்ள சூழல் நிலவுவதாக இந்தியப் பெருமுதலாளிகளின் சங்கமான “ஃபிக்கி” பூரிக்கிறது.

இவையனைத்தும் அமெரிக்காவின் போர்த் தேரில் இந்தியா பிணைக்கப்பட்டிருப்பதையும், சீனாவைச் சுற்றிவளைத்துத் தாக்கும் அமெரிக்காவின் மேலாதிக்கத் திட்டத்துக்கு விசுவாச அடியாளாக இந்தியா மாற்றப்பட்டிருப்பதையும் மெய்ப்பித்துக் காட்டுகின்றன. இந்தியா வல்லரசாக வளர்வதற்கு நாங்கள் உதவுவோம் என்று அமெரிக்கா கூறுவதன் பொருள், அமெரிக்காவின் உலக மேலாதிக்கத் திட்டத்துக்கு இந்தியா விசுவாசமாகச் செயல்பட வேண்டும் என்பதுதான்.
ஏற்கெனவே மறுகட்டுமானப் பணிகள் என்ற பெயரில் ஆப்கானிலும், கடற்கொள்ளையர்களிடமிருந்து கப்பல்களைப் பாதுகாப்பது என்ற பெயரில் சோமாலியாவிலும், அமைதிப்படை என்ற பெயரில் பல ஆப்பிரிக்க நாடுகளிலும் அமெரிக்காவுக்கு விசுவாச சேவை செய்துவரும் இந்தியப் படைகள், இனி சீனாவுக்கு எதிரான பதிலிப் போர்களிலும் ஈடுபடுத்தப்படும். சீனா பாரம்பரிய உரிமை கோரும் தற்போது வியட்நாமால் உரிமை கோரப்பட்டுள்ள தீவுப் பகுதிகளில் இருந்து எண்ணெய் தோண்டுவதில் வியட்நாமுடன் உடன்பாடுகளைச் செய்து கொண்டுள்ளதன் மூலம், இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தென்சீனக் கடலில் சீனாவின் இறையாண்மையுடன் பகிரங்கமாக மோதும் நிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்க மேலாதிக்க ஆக்கிரமிப்புக்கு ஊழியம் செய்யும் இந்திய அரசு, ஏற்கெனவே ஆப்கானில் பல இந்தியர்களைக் காவு கொடுத்ததைப் போல, சீனாவுக்கு எதிரான இத்தகைய ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளால் இன்னும் பலரைக் காவு கொடுக்கும் பேரபாயம் ஏற்பட்டுள்ளது.
ஆசிய கண்டத்தில் அமெரிக்காவின் அடியாளாகச் சேவை செய்வதன் மூலம் இந்திய ஆளும் வர்க்கங்கள் தெற்குதென்கிழக்காசிய நாடுகளில் தமது சந்தையை விரிவுபடுத்தி ஆதாயமடையத் துடிக்கின்றன. இதற்கேற்ப இந்திய அரசும் ஊடகங்களும் தேசபக்தியின் பெயரால் சீன எதிர்ப்புப் பிரச்சாரத்தை நடத்தி வருகின்றன. இந்தியாவின் அணுசக்தித் திறன் கொண்ட அக்னி5 ஏவுகணை, சீனாவைத் தாக்கி அழிக்கும் அரக்கன் என்று ஊடகங்களால் வர்ணிக்கப்பட்டது. தலாய்லாமாவின் புத்த மாநாட்டுக்கு இந்திய அரசு அனுமதியளித்து சீனாவை ஆத்திரமூட்டிய அதேநேரத்தில், ஏழாம் அறிவு போன்ற திரைப்படங்கள் தமிழனின் பெருமையைப் பறைசாற்றுவதாகக் காட்டிக்கொண்டு சீன எதிர்ப்பை உசுப்பி விடுகின்றன.இந்நிலைமைகள் ஒருபுறமிருக்க, அமெரிக்காவின் விசுவாச நாடான பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவுமிடையே அண்மைக்காலமாக முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. விசுவாச நாடாக இருந்த போதிலும், பாக்.கின் பெயரளவிலான சுயாதிபத்திய உரிமையை மிதித்து, அபோடாபாத் நகரில் அத்துமீறி தாக்குதல் நடத்தி, ஓசாமா பின்லேடனை அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் கொன்றொழித்தன. ஆப்கான் எல்லையை ஒட்டியுள்ள வஜீரிஸ்தான் பகுதியில் நேட்டோ படைகள் நடத்தும் வான் வழித் தாக்குதலாலும், ஆளில்லா விமானத் தாக்குதலாலும் பாக். மக்கள் வாழ்வுரிமையையும் இழந்து கந்தலாகிக் கிடக்கின்றனர்.

அமெரிக்காவுக்கு நீண்டகால விசுவாச அடியாளாக இருந்த பாகிஸ்தான் மீதே அமெரிக்கா தாக்குதல் நடத்தி அந்நாட்டை உருக்குலைத்திருக்கும் போது, இந்தியாவோ கொள்ளியை எடுத்து கூந்தலைச் சொறிந்த கதையாக, நாட்டையும் மக்களையும் பேரழிவில் தள்ளிவிட்டு அமெரிக்காவின் புதிய விசுவாச அடியாளாக மாறி, தெற்காசியாவில் ‘வல்லரசாக’ விரிவடையத் துடித்துக் கொண்டிருக்கிறது.
THANKS TO ASIANANBAN.BLOGSPOT.COM
0 comments:
Post a Comment