Tuesday, April 23, 2013

LTTE ?



     எதை மறந்தாலும் இதை மறக்க மாட்டோம் விடுதலைப் புலிகளால் வடக்கு மாகான முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதன் 22 ஆம் ஆண்டு நிறைவுபிற

     இலங்கைத் தமிழ் முஸ்லிம்கள் கொடூரமான முறையில் தங்கள் இருப்பிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டதன் 22 ஆம் ஆண்டு நிறைவு கட...ந்தவாரம் பதிவானது. 1990ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வடக்கு மாகாணத்தை சேர்ந்த தமிழ்பேசும் முஸ்லிம்கள் மிகக்கொடிய முறையில் பலவந்தமாக துரத்தப்பட்டனர். இந்த “இனச்சுத்திகரிப்பு” ஆரம்பித்த ஓரிரு தினங்களிலேயே பல நூற்றாண்டுகளாக உறைவிடமாக இருந்த முஸ்லிம்களின் இடம் வெறிச்சோடிப்போனது. விடுதலைப் புலிகளை வெற்றியாளர்களாக நினைத்து அவர்களைத் துதிபாடும் தமிழர்களுக்கு, வடமாகாண முஸ்லிம்களின் வெளியேற்றத்தையும், அவமானங்களையும், அதன் பின்விளைவுகளையும் இந்தக் கட்டுரையில் நினைவு கூறுகிறார் கட்டுரையாசிரியர். மறந்தவர்கள் படித்து பழயதை நினைவில் கொள்ளட்டும்.

1    990 இல் நடந்த இந்த வடமாகாண முஸ்லிம்களின் வெளியேற்றம் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இனச்சுத்திகரிப்பாகும். துப்பாக்கி முனையில் மக்களின் பணத்தையும் உடைமைகளையும் பறித்துக்கொண்டு அவர்களை தம் பூர்வீகத்தில் இருந்து வேர் அறுத்தது மன்னிக்க முடியாத குற்றமாகும். ஓக்டோபர் 15 சாவகச்சேரியில் ஆரம்பித்த இந்த இன வெளியேற்ற வன்முறை ஒக்டோபர் 30 இல், பல உயிர்கள் சூறையாடப்பட்ட பின் யாழ்ப்பாணத்தில் முடிவுக்கு வந்தது.

      இந்த அக்கிரமத்தால் பெரும்பகுதி வடக்கு முஸ்லிம்கள் மன்னாரில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இந்த கொடுமையான சூழலில் அவர்கள் அங்கிருந்து ஈவு இரக்கமின்றி வெளியேற்றப்பட்டனர். இது தவிர கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இருந்தும் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனர். வவுனியா கொஞ்சம் அதிர்ஷ்டத்தினால் தப்பித்தது. இங்கிருந்த முஸ்லிம்களின் வாழ்விடங்கள் அரசுக்கு சொந்தமான பகுதியில் இருந்ததால் பெருமளவில் பதிப்பு எதுவும் ஏற்படவில்லை. 1990இல் வடக்கில் இருந்து சுமார் 50000 முஸ்லிம்களும், வடக்கிலும் குடாநாட்டிலும் சேர்த்து மொத்தமாக 75000 முஸ்லிம்களும் தம் வீடு வாசல்களை இழந்து பூர்வீக அநாதைகளாக்கப்பட்டனர். மற்ற தமிழர்களைப் போலவே வடக்கு முஸ்லிம்களும் போரால் பெருமளவு பாதிக்கப்பட்டனர். குண்டுவெடிப்புகளின்போது தம் வீடுகளில் இருந்து வெளியேறுவதும், மீண்டும் திரும்புவதுமாக என்று ஒரு துன்பியல் வாழ்க்கை முறைக்கு தள்ளப்பட்டனர். வடக்கில் இது நடந்து கொண்டிருந்த தருணம் கிழக்கில் ஒரு பிரச்சினை பூதாகரமாக வெடித்தது. அங்கு முஸ்லிம்களின் மீது வெறுப்பு அதிகரித்து வந்தது. இதன் ஒரு கூறாக விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து பல முஸ்லிம் உறுப்பினர்கள் தலைமைத்துவத்தால் நீக்கப்பட்டனர். முஸ்லிம்களுக்கு எதிரான கசப்புணர்வு அதிகரித்த வண்ணம் இருந்தது. மறுபக்கம் அன்றைய ஐ.தே.க. அரசு இந்த வெறுப்புணர்வை மேலும் தூண்டிவிட்டது. விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை ஊர்காவற் படையில் அரசு இணைத்துக்கொண்டது. இவர்கள் தமிழ் இனத்துக்கு எதிரான வன்முறைகளை முடுக்கி விட்டனர். சில கொடூர கொலைகள் இந்த முஸ்லிம்களால் நடந்தேறின. ஐ.தே.கட்சி அரசு இவர்களுக்கு மறைமுகமாக உதவியதே பல கிராமங்கள் சூறையாடப்பட காரணமாய் அமைந்தன. முஸ்லிம்களால் ஏற்படும் அழிவுகளைப் பார்த்துக்கொண்டிருந்த விடுதலைப் புலிகள் தம் பங்குக்கு முஸ்லிம்களை சீரழித்து, கொல்லும் முயற்சிகளில் இறங்கியது. சம்மாந்துறை மற்றும் காத்தான்குடி பகுதிகளில் உள்ள பள்ளி வாயில்களை தாக்கி அங்கு தொழுது கொண்டிருந்த முஸ்லிம்களைக் கொன்று குவித்தனர். ஏறாவூரில் உள்ள சதாம் ஹசைன் மாதிரி கிராமத்தில் சாமானியர்களை கொலை செய்தனர். குறிப்பிட்ட சில நிகழ்வுகள் கிழக்கில் இப்படி இருக்க, வடக்கில் இரண்டு இனத்தவரும் இணக்கமாக வாழ்ந்தனர். இதற்கு முஸ்லிம்கள் சிறுபான்மையினராய் இருந்தது ஒரு முக்கிய காரணம்.

சாவகச்சேரி:
      வடக்கில் முஸ்லிம்கள் அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்ததை விடுதலைப் புலித்தலைவர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. கிழக்குத் தளபதி கரிகாலன், தன் தலைமையில் வடக்கில் முஸ்லிம்களுக்கு எதிரான கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பிரபாகரனை வற்புறுத்திக் கேட்டுக்கொண்டார். கரிகாலன் முஸ்லிம்களுக்கு நல்ல ஒரு பாடம் புகட்ட எண்ணினார். இந்தத் தருணத்தில் சாவகச்சேரியில் ஒரு நிகழ்வு நடந்தேறியது.

      1990ம் ஆண்டு, செப்டம்பர் 4ம் திகதி, விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேர்ந்த தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் சாவகச்சேரி பள்ளி வாயில் அருகே கை கலப்பு ஏற்பட்டது. இஸ்லாமிய இளைஞர்கள் சிலர் அத்தமிழர்களை கைப்பற்றி விடுதலைப் புலிகளிடம் ஒப்படைத்தனர். அப்போது விடுதலைப் புலிகள், “சிறுபான்மையினர் பெரும்பான்மையினரைத் தாக்கக் கூடாது” என்று கூறி திருப்பி அனுப்பி விட்டனர். அதே மாதம் 25 ஆம் திகதி குடாநாட்டை விட்டு வெளியில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட ஒரு முசலி இளைஞனை விடுதலைப் புலிகள் கைது செய்தனர். அன்றிலிருந்து அவரைக் காணமுடியவில்லை. பெரும்பான்மையான சாவகச்சேரி முஸ்லிம்கள் நகரின் டச்சுக் சாலையில் குடியிருந்தனர். முஸ்லிம்களுக்கு இடையேயான ஒரு வன்முறை நிகழ்வை விடுதலைப் புலிகள் விசாரித்துக்கொண்டிருந்த பொழுது சில வாள்களை கைப்பற்றினர். இது அவர்களுக்கு ஆபத்தின் எச்சரிக்கை மணியாக ஒலித்து. அங்குள்ள எல்லா முஸ்லிம்களின் வீடுகளிலும், வர்த்தக நிலையங்களிலும் சோதனையிட்டனர். அப்பொழுது ஒரு முஸ்லிம் வியாபாரியின் கடையில் இருந்து 75 வாள்கள் கைப்பற்றப்பட்டன. தங்கள் இயக்கத்திற்கு எதிராக பெரும் சதி நடப்பதாக புலிகள் பீதி அடைந்தனர். 75 வாள்கள் கண்டெடுக்கப்பட்டது உண்மை என்றாலும், இனப் பேரழிவை ஏற்படுத்தும் விடுதலைப் புலிகளுக்கு முன்னாள் இந்த வாள்கள் வெறும் தூசு. புலிகளின் கூற்றின் படி கண்டுக்கப்பட்ட இந்த “ஆபத்தான ஆயுதங்கள்” ஒரு முஸ்லிம் வணிகரின் கடையில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. வியாபாரம் தொடர்பாக அவரின் லொரிகள் அடிக்கடி கொழும்பு சென்று வரும். இவர்கள் அரச உளவுத்துறைக்கு ஒற்றர்களாக இருக்கலாம் என சந்தேகம் கொண்டனர். அதன் விளைவு ஒக்டோபர் 15 ஆம் திகதி சாவகச்சேரியில் வசித்து வந்த பெரும்பான்மையான முஸ்லிம்களில் சுமார் 1000 வெகுஜன மக்களை வெளியேற்றினர். இந்த அப்பாவி மக்கள் வடக்கின் தென்கோடியில் உள்ள வவுனியாவையும் தாண்டிச் செல்லுமாறு கட்டளை இடப்பட்டனர். இம்மக்கள் ஒக்டோபர் 18இல் வவுனியா வந்தடைந்தனர். சாவகச்சேரி முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதன் பின் மற்ற இடங்களில் உள்ள இஸ்லாமியர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டது சங்கிலித் தொடர் நிகழ்வானது. இந்த வெளியேற்றத்தின் சோகம் என்னவென்றால் பலர் பல தலைமுறைகளாக வாழ்ந்த தம் பூர்வீக மண்ணை விட்டு வெளியேறினர். அச்சமயத்தில் எந்த எதிர்ப்போ, புறக்கணிப்போ இல்லை. காரணம், புலிகள் வசமிருந்த அதீத அதிகாரம். முஸ்லிம்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தது என இரண்டு காரணங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

      ஐந்து வருடங்களுக்குப் பின் 1995 இல் முஸ்லிம்கள் மட்டுமின்றி தமிழர்களும் யாழ்ப்பாணத்தில் இருந்து போர் காரணமாக வெளியேற்றப்பட்டனர். பின்னர், போரின் போக்கு தீவிரமடைந்ததால் 2007-2009 ஆண்டுக்கு இடைப்பட்ட காலங்களில் பலர் தம் பூர்வீகத்தில் இருந்து இடம் பெயர்க்கப்பட்டு முல்லைத்தீவின் கரையோரங்களில் தவிக்க விடப்பட்டனர். இது தர்மத்தை காக்க ஏற்படுத்தப்பட்ட முன்வினை பயன் என்று புலிகளால் தம்பட்டம் அடிக்கப்பட்டது.

கரிகாலன் :
      வடக்கில், ஒக்டோபர் மாதத்தில் நிகழ்ந்த இந்த பெரும் குடி பெயர்ப்பு மாற்றத்தை ஏற்படுத்திய வடமாகாண முஸ்லிம்களின் வெளியேற்றம் ஏற்பட முக்கிய காரணம் கரிகாலனும் அவருக்கு கீழ் இயங்கிய கிழக்குப் படையுமே. கிழக்கு மாகாண முஸ்லிம்களை பழி வாங்கும் படலமாக ஆரம்பித்த இந்த நிகழ்வு இன அழிவை நோக்கியதாகவும், பூர்வீகக் குடிகளை அழிப்பதாகவும் மாற்றம் கொண்டதற்கு காரணம் முஸ்லிம்களிடம் இருந்து வந்த அச்சுறுத்தல்களும், புலிகள் முஸ்லிம்களை ஆற்றல் வாய்ந்தவர்களாகப் பார்த்ததும்தான். 1982 கணக்கெடுப்பின் படி மன்னார் மாவட்டத்தில் மொத்த மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 26% இருந்தனர். இம்மாவட்டத்தில் எருக்கலம்பிட்டி மிகவும் செல்வச் செழிப்பான முஸ்லிம் கிராமம். 1990ம் ஆண்டு ஒக்டோபர், 21 ஆம் திகதி சுமார் 300 புலிகளால் துப்பாக்கி முனையில் இவ்வூர் மக்களின் பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. 800-850 வீடுகள் சூறையாடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. ஒக்டோபர் 22 அன்று புத்தளம் மாவட்டத்தில் உள்ள மரிச்சுக்கட்டி கிராமத்தில் உள்ள சில முஸ்லிம்கள் ராணுவ அதிகாரிகளுடன் கள்ளத் தொடர்பு வைத்திருப்பது புலிகளால் கண்டறியப்பட்டது. இதனால் கடும் கோபமுற்ற புலிகள், ஒக்டோபர் 23 ஆம் திகதி மரிச்சுக்கட்டியில் அமைந்துள்ள முசலியிலிருந்து அணைத்து முஸ்லிம்களும் வெளியேற வேண்டும் என ஆணை பிறப்பித்தனர். இதனை தொடர்ந்து ஒக்டோபர் 24இல் ஒலி பெருக்கிகள் மூலம் மன்னாரிலும், பெரும்பான்மையான முஸ்லிம்கள் வசித்த மரிச்சுக்கட்டியில் உள்ள முசலி பிதேச செயலகப் பகுதிகளில் இருந்தும் முஸ்லிம்கள் வெளியேற வேண்டும் என புலிகள் முழக்கமிட்டனர். இதனால் செய்வதறியாது திகைத்த அப்பாவி முஸ்லிம்கள் தம் உடைமைகளை மூட்டை கட்டினர். இந்நிலையில் ஒக்டோபர் 26 எருக்கலம்பிட்டி மீண்டும் சூறையாடப்பட்டது. மன்னார் பகுதியின் பல தமிழர்கள், கத்தோலிக்க மதகுருமார்கள் உட்பட பலரும் புலிகளிடம் இந்த வெளியேற்றத்தை நடத்த வேண்டாம் என கேட்டுக்கொண்டனர். ஆனால் புலிகள் எதற்கும் மசியவில்லை. முஸ்லிம்கள் வெளியேறும் நாளை நவம்பர் 2 ஆம் திகதிக்கு தள்ளி மட்டும் வைத்தனர். அக்டோபர் 28 எருக்கலம்பிட்டி மற்றும் பிற மன்னார் பகுதிகள் புலிகளால் சீலிடப்பட்டன. பின்னர் மன்னாரை சேர்ந்த எருக்கலம்பிட்டி, புதுக்குடியிருப்பு, தாராபுரம், உப்புக்குளம், கொந்தைப்பிட்டி ஆகிய பகுதி மக்கள் புலிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட கடற்கரை பகுதியில் உணவும், நீரும் இன்றி விடப்பட்டனர். இவர்களைப் பார்த்து இரக்கப்பட்ட மன்னார் மக்கள் விடுதலை புலிகளுடன் போராடி அவர்களுக்கு உணவும் ரொட்டியும் கொண்டு வந்து கொடுத்தனர். பின்னர், மன்னார் தீவு மக்கள் படகுகளில் ஏற்றிச் செல்லப்பட்டு வடக்கில் 60 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கல்பிட்டியில் விடப்பட்டனர். இதற்கு மன்னார் மற்றும் புத்தளம் பகுதி முஸ்லிம்களின் படகுகள் பயன்படுத்தப்பட்டன. மூன்று நாள் நடந்தேறிய இந்த பயணத்தில் சில குழந்தைகள் கடலில் தவறி விழுந்து இறந்தன. கல்பிட்டியை அடைந்ததும் எண்ணற்ற முதியவர்களும், குழந்தைகளும் மரணமடைந்தனர்.

பிரதான பகுதி :
      மன்னார் தீவு முஸ்லிம்களின் நிலை அவலமானதாகவும் சோகம் கவ்வியதாகவும் மாறியது. இந்த இடப்பெயர்வுக்கு மற்ற முஸ்லிம்களும் விதிவிலக்காகவில்லை. முசலி பிரதேச செயலக பகுதி, விடத்தல் தீவு, மன்னார், வடக்காண்டல், பார்ப்பன்காண்டல் ஆகிய பகுதி முஸ்லிம்களிடமிருந்த வாகனங்கள், எரிவாயு, மின்சாதனங்கள் ஆகியவை ஒக்டோபர் 25 ஆம் திகதி கைப்பற்றபட்டன. ஒக்டோபர் 26 இவர்கள் தம் சொந்த மண்ணில் இருந்து எப்படி வெளியேறவேண்டும் என்று உள்ளூர் விடுதலைப் புலி அதிகாரிகளிடம் இருந்து தெரிந்து கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டது. ஒவ்வொரு குடும்பமும் முறையே 5 பயணப்பைகள், 2000 ரொக்கம், 1 சவரன் நகை மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். மடு, பாண்டிவிரிச்சான் மற்றும் வவுனியாவுக்கு அருகில் என மூன்று இடங்களில் இந்த முஸ்லிம்கள் சோதனை செய்யப்பட்டனர். அதிகமாக எடுத்து வந்த உடைமைகள் புலிகளால் கைப்பற்றப்பட்டன. வாகனம் எதுவும் இல்லாததால் இந்த பிரிவு முஸ்லிம்கள் வவுனியாவிற்கு கால்நடையாகவே வந்தேறினர். இந்த வெளியேற்றம் வன்னியின் வட பகுதியிலும் நடந்தேறியது. ஒக்டோபர் 22 ஆம் திகதி நீராவிபிட்டியில் சில முஸ்லிம்கள் ராணுவத்திற்கு தகவல் தெரிவிப்பதாக சந்தேகம் எழுந்ததால் கைது செய்யப்பட்டனர். அன்று மாலையே முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் ஒரு வாரத்திற்குள் வெளியேற வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அன்றைய மறுநாள் ஒக்டோபர் 23, கிளிநொச்சியைச் சேர்ந்த முஸ்லிம்கள் ஐந்து நாட்களுக்குள் வெளியேற வேண்டும் என உத்தரவு வந்தது. 1981 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி முஸ்லிம்கள் முல்லைத்தீவில் 4.6% ஆகவும், கிளிநொச்சியில் 1.6% ஆகவும் இருந்தனர். வவுனியாவில் 6.6% முஸ்லிம்கள் இருந்தனர். இதன் பெரும்பான்மையான பகுதி அரசுக்கு உட்பட்டதாக இருந்ததால் இப்பகுதிகளில் பெரும் வெளியேற்றம் நடைபெறவில்லை. ஆனால் விடுதலைப் புலிகளின் பகுதிகளில் இருந்த முஸ்லிம்கள் நவம்பர் 1 ஆம் திகதிக்குள் வெளியேற்றப்பட்டனர். வன்னியில் இந்த பெரும் குழப்பம் நேர்ந்த போதும் யாழ்ப்பாணம் எந்த பாதிப்பும் அடையாமல் இருந்தது. 1981 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள் தொகையில் யாழ்ப்பாண முஸ்லிம்கள் 1.6% வகித்தனர். யாழ்ப்பாண முஸ்லிம்கள் அவர்கள் தங்கள் மாவட்டத்தின் ஒரு அங்கம் என தங்களை நினைத்தனர். ஹிட்லரின் ஆட்சியின் பொழுது சில யூதப் பகுதிகள் எந்த எந்த அச்சுறுத்தலும் காணாமல் இருந்தது. அதே போல் இலங்கையில் யாழ்ப்பாணம் இருந்தது.

யாழ்ப்பாணம்:
      விடுதலைப் புலிகள் பெரும் வெறுப்பைக் கக்கியது யாழ்;ப்பாண   முஸ்லிம்களின் மீதுதான். அதனால் கடைசியாக அங்கு வந்தனர், மக்கள் வெளியேற மற்ற இடங்களைக் காட்டிலும் குறைந்த அவகாசமே தரப்பட்டது. யாழ்ப்பாண முஸ்லிம்களுக்காக விடுதலைப் புலிகள் குறித்த நாள் ஒக்டோபர் 30. அதற்கு முன்பே பல முஸ்லிம்கள் மேற்கத்திய நாடுகளுக்கு சென்றுவிட்டனர். கனடாவிலும் சில முஸ்லிம்கள் குடியேறினர். அங்கு டொரோண்டோவில் சந்தித்துப் பேசிய பலர் இன்று எனக்கு நெருக்கமான நண்பர்களாக இருக்கிறார்கள். வெளியேற்றம் குறித்த அவர்களின் அனுபவங்களைக் கேட்டு மிகவும் மனவேதனைக்கும், மன அழுத்ததிற்க்கும் ஆளாகியுள்ளேன். சுமார் 10.30 மணியளவில் யாழ்ப்பாண தெருக்களில் ரோந்து வந்த புலிகள் அணைத்து முஸ்லிம் குடும்பத்தில் இருந்தும் தலா ஒரு பிரதிநிதி 12 மணிக்கு ஒஸ்மானியா கல்லூரியில் உள்ள ஜின்னா மைதானத்தில் கூடும்படி கட்டளை இடப்பட்டது. சரியாக 12.30 மணியளவில் புலிகளின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆஞ்சநேயர் என்கின்ற இளம்பரிதி ஒலிபெருக்கியில் பேசினார். இரண்டு மணி நேரத்தில் அனைத்து முஸ்லிம்களும் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற வேண்டும் என முழங்கினார். அதற்கு முஸ்லிம் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் தன் துப்பாக்கியைக் கொண்டு வானத்தை நோக்கி சுட்டார். அவரது காவலர்களும் அவ்வாறே செய்தனர். இதனால் பயந்து போன முஸ்லிம்கள் பதறி அடித்து ஓடினர். முதலில் அனைத்து மக்களும் ராணுவத்திற்கு கட்டுப்பட்டு வெளியேற வேண்டும் என முஸ்லிம்கள் நினைத்தனர். பிறகுதான் அவர்களுக்குப் புரிந்தது, முஸ்லிம்கள் மட்டும் வெளியேற வேண்டும் என புலிகள் தொடர்ந்து ரோந்து வந்ததால் முஸ்லிம்கள் அவசர அவசரமாக தம் உடைமைகளை மூட்டை கட்டிக்கொண்டு வெளியேறினர். அச்சமயத்தில் அவர்கள் எதை எடுத்துச் செல்ல வேண்டும் என எந்த அறிவிப்பும் வரவில்லை. அவர்கள் அப்பகுதியை விட்டு வெளியேற புலிகளால் வாகன வசதி செய்து தரப்பட்டது. பலர் தம் சொந்த வாகனங்களிலேயே இடம் பெயர்ந்தனர்.

ஐந்துமுச்சந்தி:
      யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு ஒரு புது உத்தரவு காத்துக்கொண்டிருந்தது. வெளியேறிய அனைவரும் ஐந்துமுச்சந்தியில் கூட வேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டது. அங்கு அனைவரிடம் இருந்தும் பணம் மற்றும், நகைகள் பறிக்கப்பட்டன. ஒரு நபருக்கு தலா 150 ருபாய் மட்டுமே கொடுக்கப்பட்டது. மேலும் அவர்கள் துணிப்பையில் இருந்து ஒரு ஆடையை மட்டுமே வழங்கினர். அதற்கு சில எதிர்ப்புகள் கிளம்பின. ஆனால் அனைத்தும் புலிகளின் துப்பாக்கிச் சத்தங்களுக்கு ஒடுங்கிப்போயின. அவர்களிடம் இருந்து எல்லாப் பணமும், அடையாள அட்டைகளும் பறிக்கப்பட்டன.

      சில பெண் அதிகாரிகள் மிகவும் கொடூரமாக நடந்துகொண்டனர். பெண்களிடம் இருந்த நகைகள் அனைத்தும் பறிக்கப்பட்டன. சிலர் பெண்களின் காதில் இருந்த கம்மல்களை கழற்றக் கூட அவகாசம் தராமல் அதை அப்படியே சதை அறுந்து ரத்தம் வரும் அளவிற்கு பிடித்து இழுத்தனர். பல முஸ்லிம் வணிகர்கள் தங்கம் இருக்கும் இடத்தை கேட்டு கொடுமைப்படுத்தப்பட்டனர். இதில் 35 பெருஞ் செல்வந்தர்கள் கடத்தப்பட்டனர். பல முஸ்லிம் தங்க வியாபாரிகள், மறைத்து வைக்கப்பட்டுள்ள தங்கம் இருக்கும் இடங்களை சொல்லுமாறு துன்புறுத்தப்பட்டனர். கடத்தப்பட்டவர்கள் பெரும் தொகையை கொடுத்ததால் படிப்படியாக விடுவிக்கப்பட்டனர். ஒருவர் 3 மில்லியன் வரை கொடுத்து தப்பித்து வந்தார். இதில் 13 பேர் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. புலிகள் இவர்களை கொன்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
 

     அவர்கள் சென்ற பின் அவர்கள் வாழ்ந்த பகுதிகளில் கயிறு கொண்டு எல்லை ஏற்படுத்தப்பட்டது. 1990ம் ஆண்டு நவம்பர் 2 ஆம் திகதி வெளியான “வீரகேசரி”, இது வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் உடைமைகளை பாதுக்காக்க ஏற்ப்படுத்தப்பபட்ட முயற்சி எனக் கூறியது. சில அப்பாவி முஸ்லிம்களும் இக்கூற்றை உண்மை என நம்பினர். அவர்களுக்கு உண்மை நிலை விளங்க சில மாதங்கள் பிடித்தன. விடுதலைப் புலிகள் யாழ்ப்பாண முஸ்லிம்களை மற்றவர்களைக் காட்டிலும் மிகவும் துன்புறுத்தினர். இட நெருக்கடியான இரண்டு, மூன்று யாழ்ப்பாண முனிசிபாலிடிகளில் அவர்களை அடைத்தார்கள். சோனகத் தெரு, ஓட்டுமடம், பொம்மைவெளி ஆகியவை புலிகளுக்கு சொந்தமான இடங்கள். இது யாழ்ப்பாண சமூகத்தின் ஒரு அங்கம். ஒரு காலத்தில் மேயர் அல்பிரட் துரையப்பா கட்டிய புது அங்காடி முஸ்லிம்களின் ஆதிக்கத்தில் இருந்தது. இது தவிர நகை, லொரி போக்குவரத்து, மாமிச வர்த்தகங்கள் பெருமளவில் முஸ்லிம்களிடம் இருந்தது. யாழ்ப்பாண தமிழர்களைப்போல் யாழ்ப்பாண முஸ்லிம்கள் கல்வித்துறையில் பெரும் முன்னேற்றம் கண்டவர்கள். ஆட்சித் துறை அதிகாரி ஜாஹிரா, உச்சநீதிமன்ற நீதிபதி அப்துல் காதர், அப்பீயல் நீதிமன்ற நீதிபதி எம் எம் ஜமீல், கல்வித் துறை இயக்குனர் மன்சூர், மேயர்கள் பஷீர் மற்றும் சுல்தான், மக்களவை உறுப்பினர் இமாம் ஆகியோர் யாழ்ப்பாண பூமி கொடுத்த தலைசிறந்த முஸ்லிம் குடிமகன்கள். இதனால்த்தானோ என்னவோ பல விடயங்களில் யாழ்ப்பாணம் முன்னேறிய பிரதேசமாக இருந்ததால் புலிகளின் தாக்குதால் இவர்கள் மேல் சற்று அதிகமாகவே இருந்தது.

அகதிகள்:
      பெரும்பாலான வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் தற்காலிகமாக புத்தளம் மாவட்டத்தில் அகதிகளாகத் தங்கினர். பலர் வவுனியா, நீர்கொழும்பு, கொழும்பு, அனுராதபுரம், கண்டி ஆகிய பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தனர். பெரும்பாலானா யாழ்ப்பாண முஸ்லிம்கள் வெளிநாடுகளில் அகதிகளாகக் குடியேறினர். வடக்கில் இருந்த முஸ்லிம்கள் கல்பிட்டி, புளிச்சகுலம் பதிகளிலும் புத்தளத்தில் உள்ள தில்லையடி பகுதிக்கும் அனுப்பிவைக்கப் பட்டனர். முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டவுடன் அவர்களின் வீடுகள் அனைத்தும் சூறையாடப்பட்டன. அவர்களின் வீட்டுக் கதவுகள், சட்டங்கள், மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் “மக்கள் கடை” என்ற பெயரில் தமிழர்களுக்கு விடுதலைப் புலிகளால் விற்கப்பட்டன. போர் முடிந்து தம் பகுதிக்கு திரும்பிய முஸ்லிம்கள் தங்கள் உடைமைகளைப் பிற கடைகளிலும், வீடுகளிலும் பார்க்கும் நிலை ஏற்ப்பட்டது. பலரின் வீடுகளும், நிலங்களும் சட்டவிரோதமான முறையில் விற்கப்பட்டன. 1981 கணக்கெடுப்பின் படி, வட மாகாண மொத்த முஸ்லிம் மக்கள் 50991 அல்லது 4.601% ஆக இருந்தது. முஸ்லிம் சமூகத்தின் தலைவர்கள், 1990 இல் வெளியேற்றப்பட்ட நேரத்தில் வட மாகாணத்தில் 81000 முஸ்லிம் மக்கள் இருந்தனர் என கூறுகின்றனர். யாழ்ப்பாணத்தில் இருந்து 20000 மன்னார் 45000, முல்லைத்தீவு -7000, கிளிநொச்சி 1000. இதில் 67000 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். பிறர் தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் குடியேறினர். 22 ஆண்டுகள் கழித்து இயற்கையின் காரணமாக இந்த மக்கள் தொகை அதிகரித்து உள்ளது. பலர் வடக்கில் சென்று தம் வாழ்வைப் புதிதாக ஆரம்பிக்க ஆசைப்பட்டாளும் ஒரு சிலரால் மட்டுமே செல்ல முடிகிறது.

கணக்கெடுப்புகள்:
      2012 கணக்கெடுப்பின்படி வடக்கு மாகாணங்களில் உள்ள முஸ்லிம் மக்களின் எண்ணிக்கை பின்வருமாறு. மன்னார் 16087 -16,2%, வவுனியா சுமார் 11700 – 6.8%, யாழ்ப்பாணம் 2139 -0.4%, முல்லைத்தீவு 1760 – 1.9%, கிளிநொச்சி 678 -0.6%. 1990 இல் வெளியேற்றப்பட்ட நேரத்தில் மதிப்பீடுகள் ஒப்பிடுகையில் முஸ்லீம் மக்கள் வட மாகாணத்தில் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்போது வெறும் 32396 முஸ்லிம்களே இப்பகுதிகளில் உள்ளனர். வடக்கில் முஸ்லிம் குடியேற்றம் முன்போல் சரிவர அமையாததற்கு சமுதாய, பண்பாட்டு, அரசியல் கரணங்கள் என பல உள்ளன. ஆனால் விடுதலைப் புலிகள் இழைத்த இந்தக் கொடுமைகள் இந்த மக்கள் மனதில் நீங்கா வடுவாக இருந்தாலும் இன்றும் வடக்கை தங்கள் பூர்வீகமாக ஏக்கத்துடனும், பழைய நினைவுகளுடனும் பார்க்கின்றனர். வடக்கில் உள்ள தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் நல்லதொரு நட்பு ஏற்பட்டு ஒரு சிறந்த சமூகம் அமைவதே இந்த 22 ஆண்டு கால போராட்ட வாழ்க்கைக்கு பரிகாரம் ஆகும். இதுவே விடுதலைப் புலிகள் இழைத்த காயங்களுக்கு மருந்தாகவும் அமையும். இணைந்திருப்போம், தோழமையில் இனத்தை மறந்திருப்போம்!

உங்கள் நண்பன் பொலிஸ்


 

0 comments:

Post a Comment