Friday, April 19, 2013

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி-தோல்வியை தீர்மானிக்கும் முஸ்லிம் வாக்குகள்!

                       18 Apr 2013 SUCCESS-FAILURE
 
     பெங்களூர்:சாதி மற்றும் மதத்தின் பெயரால் பிரிவினைவாதம் வலுவான கர்நாடகாவில் வருகிற மே மாதம் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் முஸ்லிம் வாக்குகள் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகள் பா.ஜ.க ஆட்சியில் பாதுகாப்பற்ற சூழலை சந்தித்த முஸ்லிம்கள் இம்முறை அறிவுப்பூர்வமாக வாக்களிப்பார்கள் என கருதப்படுகிறது.
    
     மாநில மக்கள் தொகையில் 2001-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 12.2 சதவீதம் முஸ்லிம்கள் இருந்தபோதிலும் தற்போதைய சட்டப்பேரவையில்ஒன்பது முஸ்லிம் எம்.எல்.ஏக்கள் மட்டுமே உள்ளனர். 1952-ஆம் ஆண்டு நடந்த முதல் சட்டப்பேரவை தேர்தல் முதல் தற்போது வரை பெரும்பாலும் முஸ்லிம் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் ஒதுங்கிவிட்டது. ஐந்து, ஆறு, ஒன்பது, பதினொன்றாவது சட்டப்பேரவைகளில் மட்டுமே இதற்கு மாறான நிலை காணப்பட்டது. முஸ்லிம்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சிதறி இருப்பது பிரதிநிதித்துவம் குறைவதற்கான ஒரு காரணமாகும். தேர்தலை தங்களுக்கு ஆதரவாக திசை திருப்புவதற்கு உரிய முஸ்லிம் செல்வாக்கு பெரும்பாலான தொகுதிகளில் இல்லை என்று முன்னாள் எம்.எல்.ஏயும் கர்நாடகா முஸ்லிம்ஸ் அண்ட் எலக்டோரல் பொலிடிக்ஸ் என்ற நூலின் ஆசிரியருமான காஸி அர்ஷத் அலி கூறுகிறார்.
 
    இதனால் தான் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் போன்ற மதசார்பற்ற கட்சிகள் கூட இத்தகைய தொகுதிகளில் லிங்காயத்து, ஓக்லிகா போன்ற செல்வாக்கு பெற்ற சாதிகளைச் சார்ந்த வேட்பாளர்களை நிறுத்துவது வழக்கமாகிவிட்டது என்று அரசியல் நோக்கரும், ஜெயின் பல்கலைக்கழக ஃப்ரோ வைஸ் சான்ஸலருமான டாக்டர் சந்தீப் சாஸ்திரி கூறுகிறார். ஐந்து ஆண்டுகள் பா.ஜ.க அரசில் நேரடியாகவும், மறைமுகமாகவும் நடந்த அடக்குமுறைகள் முஸ்லிம்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.
 
     கடலோரப் பகுதிகளில் நடக்கும் அக்கிரமங்கள், பசுவதை தடுப்புச் சட்டம் நிறைவேற்றியது, நிரபராதிகளான முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாத வழக்குகளில் கைதுச் செய்து துன்புறுத்துவது உள்ளிட்டவைகள் சுட்டிக்காட்டப்படுகின்றன. 90 சதவீதத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் பா.ஜ.கவுக்கு எதிராக உள்ளதாக அர்ஷத் அலி கூறுகிறார். முஸ்லிம் சமுதாயத்தைச் சார்ந்த வேட்பாளர் வெற்றிப் பெற வாய்ப்புள்ள தொகுதிகளை தவிர வேறு தொகுதிகளில் முஸ்லிம்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களிக்க வாய்ப்பில்லை என்று அவர் கருதுகிறார். இதர தொகுதிகளில் வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பின் அடிப்படையில் காங்கிரஸிற்கோ, மதசார்பற்ற ஜனதா தளத்திற்கோ வாக்களிக்கவே வாய்ப்புள்ளது. சில தொகுதிகளில் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களுக்கு சவால் விடும் அளவுக்கு எஸ்.டி.பி.ஐ- பகுஜன் சமாஜ் கூட்டணி வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
 
    எஸ்.டி.பி.ஐ 24 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைமையிலான வெல்ஃபெயர் பார்டி 7 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியுடன் தமது கட்சி ஏற்படுத்தியுள்ள கூட்டணி தேசிய அளவில் அரசியல் மாற்றங்களுக்கு துவக்கம் குறிக்கும் என்று எஸ்.டி.பி.ஐயின் மாநில தலைவர் அப்துல் மஜீத் கூறுகிறார்.

0 comments:

Post a Comment