Monday, April 22, 2013

குமரியில் பா.ஜ.கவினர் வெறியாட்டம்!அரசு பேருந்துகள் சேதம்!

 22 Apr 2013
 
     நாகர்கோவில்:குமரி மாவட்டத்தில் பா.ஜ.க மூத்த தலைவர்களில் ஒருவரும், மாநில செயற்குழு உறுப்பினருமான எம்.ஆர்.காந்தி அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பா.ஜ.கவின் மாவட்டம் முழுவதும் அராஜகங்களில் ஈடுபட்டனர்.
 
      நேற்று(21/04/2013) காலையில் நடைப்பயிற்சி சென்றுகொண்டிருந்த அவரை 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 வாலிபர்கள் வழிமறித்து அரிவாளால் வெட்டியதாககூறப்படுகிறது. இதனால் தலையின் பின் பக்கம் காயமடைந்து மயக்கமுற்ற எம்.ஆர்.காந்தியை தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்குதீவிர சிகிட்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
     எம்.ஆர்.காந்தி தாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து பா.ஜ.கவினர் மருத்துவமனை முன்பு குவிந்தனர். நகரசபை தலைவி மீனாதேவ், பாரதீய ஜனதா மாவட்ட செயலாளர்தேவ், வர்த்தக அணி தலைவர் முத்துராமன், பொருளாளர் கணேசன், நகரத்தலைவர் ராகவன், முன்னாள் தலைவர் ராஜன், கவுன்சிலர்கள் நாகராஜன், பெருமாள் பிள்ளை, இந்து முன்னணி நகரத்தலைவர் ராஜா உள்பட நிர்வாகிகளும் அங்கு வந்தனர்.
 
     பாரதீய ஜனதா கட்சியின் மாநிலத்தலைவர் பொன். ராதாகிருஷ்ணனுக்கும் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் ஆஸ்பத்திரிக்கு சென்று எம்.ஆர்.காந்தியிடம் உடல் நலம் விசாரித்தார் காந்தியை வெட்டியவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டு மென்று கோஷம் எழுப்பினர். திடீரென அவர்கள் ஆஸ்பத்திரி முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது.
 
     தகவல் அறிந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், டி.எஸ்.பி. உதயகுமார், இன்ஸ்பெக்டர்கள் சுடலைமணி, ராஜசேகரன் மற்றும் போலீசார்விரைந்து சென்றனர். அவர்கள் போராட்டம் நடத்திய பாரதீய ஜனதா கட்சியினரிடம் சமரசம் பேசினர். எம்.ஆர். காந்தியை தாக்கியவர்களை உடனடியாக கண்டுபிடித்துநடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.இதை ஏற்றுக் கொண்ட கட்சியினர் மறியலை கைவிட்டனர். இதையடுத்து எஸ்.பி. மணிவண்ணன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் எம்.ஆர். காந்தியிடம் சம்பவம் குறித்து நேரில் விசாரித்தார்.
 
      மேலும் எம்.ஆர். காந்தி வெட்டுப்பட்டு கிடந்ததை பாரதீய ஜனதாவினருக்கு தெரிவித்த நபரிடமும் சம்பவம் குறித்து கேட்டு அறிந்தார். இதுபற்றி அவர் கூறும் போது, சம்பவத்திற்கு காரணமானவர்கள் யார்? என்பதை விரைவில் கண்டு பிடித்து நடவடிக்கை எடுப்போம். இதற்காக டி.எஸ்.பி. உதயகுமார் தலைமையில் 4தனிப்படைகள் அமைக்கப்படும். இதில் இன்ஸ்பெக்டர்கள் சுடலைமணி, ஜெயபாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயன், சுஜித் ஆனந்த் ஆகியோர் இருப்பார்கள், இவர்கள் சம்பவத்திற்கான காரணம் பற்றியும் அதில்ஈடுபட்டவர்களையும் கண்டுபிடிப்பார்கள் என்றார்.
 
     இந்நிலையில் எம்.ஆர்.காந்தி தாக்கப்பட்ட சம்பவத்தை காரணமாக வைத்து மாவட்டம் முழுவதும் பா.ஜ.கவினர் அராஜகத்தில் ஈடுபட்டனர். அரசு பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டன. 12 பேருந்துகள் பா.ஜ.கவினரின் வன்முறையில் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
 
     அதேவேளையில் கருங்கலில் கிறிஸ்தவ ஆலய வளாகத்திற்குள் நிறுத்தப்பட்டிருந்த கிறிஸ்துராஜ் என்பவர் வாடகைக்கு பிடித்து வந்த காரை நள்ளிரவில் மர்ம நபர்கள் தீவைத்துள்ளனர். நள்ளிரவில் ஆலய வளாகத்தில் கார் மர்மமான முறையில் எரிந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. கார் தீப்பிடித்து எரிந்தது பற்றிகிறிஸ்துராஜ் கருங்கல் போலீசில் புகார் செய்தார்.

0 comments:

Post a Comment