Sunday, April 28, 2013

மனரீதியான சித்திரவதை, வெற்றுத் தாள்களில் கையெழுத்திட வலுக்கட்டாயம்!-பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் போலீஸால் பிடிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்!

       28 Apr 2013
 
     பெங்களூர்:பெங்களூர் பா.ஜ.க அலுவலகம் அமைந்துள்ள மல்லேஸ்வரத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு தொடர்பாக குற்றவாளி என சந்தேகப்பட்டு போலீஸ் பிடித்துச் சென்ற திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த முஸ்லிம் இளைஞர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
 
     திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த வியாபாரியான அலியப்பா(வயது 28) என்ற முஸ்லிம் இளைஞரை சில தினங்களுக்கு முன்பு போலீஸ் பிடித்துச் சென்றது.3 தினங்கள் போலீஸ் கஸ்டடியில் விசாரணைச் செய்யப்பட்ட அலியப்பாவிடமிருந்து தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. அவரை பிடித்துச் சென்ற விபரத்தை கூடபோலீஸ் குடும்பத்தினரிடமோ, நண்பர்களிடமோ தெரிவிக்கவில்லை. அலியப்பா கடத்தப்பட்டிருப்பார் என்று சந்தேகிப்பதாக உறவினர்கள் போலீஸில் புகார் அளித்தனர். கர்நாடாகாவில் மனித உரிமை அமைப்பான அசோசியேசன் ஆஃப் ப்ரொக்டட் சிவில் ரைட்ஸ் பொதுச் செயலாளர் இர்ஷாத் அஹ்மத் தேசாய், அலியப்பா காணாமல் போனது குறித்து போலீசில் புகார் அளித்திருந்தார்.
 
     இதனைத்தொடர்ந்து பெங்களூர் போலீஸ் அலியப்பாவை விடுவித்தது. கஸ்டடியில் இருந்த 3 தினங்களும் போலீஸ் தன்னை மனரீதியாக சித்திரவதைச் செய்ததாகவும்,ஒன்றும் எழுதப்படாத வெற்றுத்தாள்களில் கையெழுத்திட வற்புறுத்தியதாகவும் அலியப்பா ஊடகங்களிடம் தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு-கர்நாடகா மனித உரிமை கமிஷன்களிடம் புகார் அளிக்கப்போவதாகவும் அலியப்பாகூறினார்.

0 comments:

Post a Comment