Friday, October 12, 2012

அதிரை அன்சாரி வழக்கை சிபிஐ விசாரிக்க தமுமுக கோரிக்கை!

சென்னை:பாகிஸ்தான் உளவாளி என்று கைது செய்யப்பட்ட தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த  தமீம் அன்சாரி வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுமாறு  தமுமுக கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து தமுமுகவின் மூத்த தலைவர் ஹைதர் அலி செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறுகையில்;  “தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த இளைஞர் தமீம் அன்சாரியை க்யூ பிரிவு போலீசார் கைது செய்த விதமும், அதன்பின் கைதுக்கு அவர்கள் கூறிய காரணங்களும் சந்தேகத்திற்கிடமாகவே இருக்கின்றன.
அன்சாரியை தீவிரவாதியாக சித்தரிப்பதற்காக க்யூ பிரிவு போலீசார் செய்த ஜோடனைகளும், அவர்களது வாதங்களும் நகைப்பிற்கிடமாகவும் சிறுபிள்ளைத் தனமாகவும் உள்ளது.
அன்சாரியின் கைது சந்தேகத்திற்குரியதாகவும் நேர்மையற்றதாகவும் இருப்பதை எங்களின் கள ஆய்வின் மூலம் கண்டறிந்தோம். பேராசிரியர் அ.மார்க்ஸ், கோ.சுகுமாரன் உள்ளிட்ட உண்மை அறியும் குழுவின் அறிக்கையும் இதுபோன்ற பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற தன்னிச்சையான உள்நோக்கம் கொண்ட கைதுகள் காஷ்மீர், டெல்லி, குஜராத், ஆந்திரா, மகாராஷ்ட்ரா உள்ளிட்ட மாநிலங்களில் மட்டுமே நடைபெற்று வந்தது. தற்போது தமிழகத்திலும் இந்நிலை தலைகாட்டுவது கவலைக்குரியது மட்டுமல்ல, கண்டனத்திற்குரியதும் ஆகும்.
இதுபோன்ற கைதுகள் அப்பாவி இளைஞர்களின் முழு இளமைக் காலத்தையும் அவர்களின் குடும்பத்தின் ஒட்டுமொத்த எதிர்காலத்தையும் பாழாக்கி விடுகின்றன. அப்பாவி முஸ்லிம் இளைஞர்களின் எதிர்கால வாழ்வோடு விளையாடும் இந்தப் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். அன்சாரி வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்

0 comments:

Post a Comment