Monday, December 17, 2012

இர்ஃபான் பத்தான் மோடியின் வலையில் சிக்கியது எப்படி?

modi with irfan pathan  17 Dec 2012       
 
     அஹ்மதாபாத்:ஹிந்துத்துவா வாக்கு வங்கியின் வீழ்ச்சியை தடுக்க முடியாத சூழலில் சிறுபான்மையின முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிக்க பல சூழ்ச்சி வலைகளை பின்னியுள்ளார் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் மோடி. ஃபேஸ்புக் புகழ் ஷஹீன் தாதாவை தனது வலையில் சிக்க வைக்க மோடி நடத்திய முயற்சி தோல்வியை தழுவியவுடன் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பத்தானை உபயோகித்து அரசியல் ஆதாயம் தேட மோடி முயற்ச்சி செய்து வருகிறார்.
 
     “காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சோனியா காந்தியின் அந்தரங்க செயலாளர் அஹ்மத் மியான் பட்டேல் குஜராத் முதல்வராவார்” என்று தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு கிண்டலடித்து பிரச்சாரம் செய்தார் மோடி. அஹ்மத் பட்டேல் என்ற அழைப்பதற்கு பதிலாக முஸ்லிம்கள் மரியாதையுடன் அழைக்கும் மியான் என்ற வார்த்தையையும் சேர்த்து பிரயோகித்தார் மோடி.
 
     குஜராத்தில் இனப்படுகொலை நடக்கும் பொழுதும், அதற்கு பின்னரும் முஸ்லிம்கள் சந்தித்த நெருக்கடிகளையும், துயரங்களையும் தீர்க்க எவ்வித உதவியும் புரியாமல், சொந்த சமுதாயத்தில் இருந்து இடைவெளியை பேணி வருபவர் அஹ்மத் பட்டேல். இவரைத்தான் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் முதல்வராகிவிடுவார் என்று கிண்டலடித்தார் மோடி.
 
     இதனிடையில், தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த பிரதமர் மன்மோகன்சிங், குஜராத்தில் இப்போதும் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பில்லை என்று கூறியது, பிரதமர் பதவி கனவில் மூழ்கியுள்ள மோடிக்கு எரிச்சலை ஊட்டியது. சிறுபான்மை முஸ்லிம்களுக்கு தான் தீண்டத்தகாதவன் அல்லன் என்பதை காட்ட, முதலில் மோடி ஷஹீன் தாதாவுக்கு வலை வீசினார்.
 
    மும்பையில் சிவசேனா தலைவர் பால்தாக்கரேயின் மரணத்தை தொடர்ந்து நடந்த முழு அடைப்பிற்கு எதிராக ஃபேஸ்புக்கில் கருத்தை வெளியிட்டவர் ஷஹீன் தாதா. இதன் பெயரால் பின்னர் கைது செய்யப்பட்டதால் பெரும் சர்ச்சை கிளம்பியது. இச்சம்பவத்திற்கு பிறகு ராஜ்கோட்டிற்கு தனது உறவினரை காணச் சென்றார் ஷஹீன் தாதா.
 
     அப்பொழுது அவர், குஜராத் பாதுகாப்பான இடம் என கூறியதாக மோடி பொய்யை அவிழ்த்துவிட்டார். இதனை யாரும் மறுக்கமாட்டார்கள் என்ற நம்பிக்கையில் மோடி தேர்தல் பிரச்சாரங்களில் பரப்புரையில் ஈடுபட்டு வந்தார். ஆனால், இதனை குறித்து கேள்வி எழுப்பிய ஷஹீன் தாதா, தான் ஒருபோதும் இத்தகைய அறிக்கையை வெளியிடவில்லை என்று மறுத்தார்.
 
      இதனால் மோடியின் மோசடி அம்பலமானது. இதனைத்தொடர்ந்து குஜராத் போலீஸாரால் க்ரிமினல் வழக்கு தொடரப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதானின் இயலாமையை பயன்படுத்த மோடி துணிந்தார். தனக்கு சொந்தமான கட்டிடத்தில் வாடகைக்கு இருந்த பெண்மணியை காலிச்செய்ய களமிறங்கியதால் வழக்கில் சிக்கினார் இர்ஃபான் பதான்.
 
     வீட்டில் இருந்த பொருட்களை சேதப்படுத்தியதோடு, பலம் பிரயோகித்து வாடகைக்கு இருந்தவரை வெளியேற்ற முயன்றதாக இர்ஃபான்பதான் மீது குஜராத் போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. தனது இமேஜை பாதிக்கும் க்ரிமினல் வழக்கில் இருந்து விடுபட வழிகளை தேடிய இர்ஃபானுக்கு தனது சொந்த இமேஜை சரிப்படுத்த வழியை தேடிக்கொண்டிருந்த மோடி உதவ தயாரானார்.
 
     விளைவு, தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் மோடியுடன் கலந்துகொண்டார். ஆனால், இந்திய வரலாறு காணாத இனப்படுகொலையை சந்தித்த குஜராத் முஸ்லிம்கள் இந்த இர்ஃபான் பதான் போன்ற மோசடிகார்களின் வலையில் சிக்கிவிடமாட்டார்கள். நன்றி தூது

0 comments:

Post a Comment