Saturday, December 29, 2012

தடா, பொடாவைவிட கொடுமைமையான சட்டமான யு.ஏ.பி.ஏ உடனே நீக்க வேண்டும்-என்.சி.ஹெச்.ஆர்.ஓ




      மனித உரிமை இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பு (என்.சி.ஹெச்.ஆர்.ஓ) சார்பாக ‘சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்’ பற்றிய கலந்தாய்வுக் கூட்டம் 20.12.2012 மாலை 5.00 மணியளவில் சென்னையில் நடைபெற்றது.என்.சி.ஹெச்.ஆர்.ஓ.வின் மாநில செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர். ஏ. ராஜா முஹம்மது வரவேற்புரையாற்றினார். மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞர் ஏ. முஹம்மது யூசுப் துவக்கவுரையாற்றினார். மனித உரிமைகளுக்கான மக்கள் கழகத்தின் தலைவர் (PUHR) பேரா. அ. மார்க்ஸ் யு.ஏ.பி.ஏ. சட்டத்தின் கொடூரத்தன்மை குறித்து அறிமுக உரையாற்றி விவாதத்தை துவக்கி வைத்தார்.


     வழக்கறிஞர் சத்ய சந்திரன் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற மனித உரிமை வழக்கறிஞர்கள், சிவில் உரிமைகளுக்கான மக்கள் கழகம் (PUCL), அரசியல் கைதிகள் விடுதலைக்கான கூட்டமைப்பு (CRPP) உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகளைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள், சட்டக்கல்லூரி மாணவர்கள், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, கேம்பஸ் ஃப்ரண்ட் மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
    மனித உரிமைகளுக்கு எதிரான சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் [Unlawful Activities (Prevention) Act, 1967 ] தற்போது 3வது முறையாக திருத்தப்பட்டுள்ளது. நடப்பு பாராளுமன்ற கூட்டத்தொடரில் மக்களவையில் கடந்த நவம்பர் 30 அன்று மத்திய அரசு விரிவான விவாதங்களை அனுமதிக்காமல் திருத்தியுள்ளது.

     1967ம் ஆண்டு இயற்றப்பட்ட இந்தச் சட்டத்தில் கடந்த 2004ம் ஆண்டு ‘பொடா சட்டம்’ ரத்து செய்யப்பட்டவுடன் அதில் இருந்த கொடும் பிரிவுகள் சட்டத்திருத்தம் என்ற பெயரில் யு.ஏ.பி.ஏ. சட்டத்தில் சேர்க்கப்பட்டன. அதன்பிறகு 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் மும்பை தாஜ் ஹோட்டல் தாக்குதல் சம்பவத்தின் போது தேசத்தில் நிலவிய தீவிரவாத பீதியை சாதகமாக்கிக்கொண்டு மத்திய அரசு 2வது முறையாக இச்சட்டத்தை திருத்தி அதன் கடுமையை அதிகரித்தது. இப்போது 3வது முறையாக மீண்டும் திருத்தப்பட்டு இன்னும் பல கொடும் பிரிவுகள் சேர்க்கப்பட்டன.

     தடா, பொடா போன்ற கருப்புச் சட்டங்களை பற்றி மக்களிடையே இருந்த விழிப்புணர்வு போன்று இந்த யு.ஏ.பி.ஏ. சட்டத்தை பற்றி விழிப்புணர்வு இல்லை. தீவிரவாதம் என்ற பெயரில் முஸ்லிம் இளைஞர்களும், மாவோயிசம், நக்சலிசம் என்ற பெயரில் தலித் மற்றும் பழங்குடியின மக்களும் இந்த சட்டத்திற்கு இரையாகிக் கொண்டிருக்கின்றனர்.
    கருத்துரிமை (Freedom of Expression), அமைப்பாக ஒன்று சேர்ந்து செயல்படும் உரிமை (Freedom of Association) போன்ற அரசியலமைப்புச் சட்ட உரிமைகளும், அரசியல் உரிமைகளும் , ஜனநாயக உரிமைகளும் (Democratic Rights) இச்சட்டத்தின் மூலம் நிர்மூலமாக்கப்படுகின்றன.

     இச்சட்டம் பற்றி மக்களிடையே நிலவும் விழிப்புணர்வின்மை, இச்சட்டத்தை எதிர்த்து எதுவும் பேசாமல்அமைதி காக்கும் மவுனமான நிலை அல்லது இந்த கருப்புச் சட்டத்திற்கு எதிரான போராட்டக்களத்தில்வெறும் பார்வையாளர்களாக மட்டும் இருக்கும் நிலை ஆகியவை ஜனநாயகத்திற்கு ஏற்பட்டிருக்கும் மிகப்பெரும் ஆபத்தாகும். அதுமட்டுமல்ல, ஜனநாயகத்தை பின்பற்றும் மக்களுக்கும் இது ஆபத்தான அறிகுறியாகும்.

     எனவே, இந்த யு.ஏ.பி.ஏ. சட்டத்தின் கொடூரம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இச்சட்டத்திற்கெதிராக வீரியமிக்க மக்கள் திரள் போராட்டத்தை பொதுத்தளங்களில் எடுத்துச் செல்லவும், இச்சட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி ஒரு தொடர் பிரச்சார இயக்கத்தை துவக்க இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.“யு.ஏ.பி.ஏ. எதிர்ப்பு கூட்டியக்கம்” என்ற பெயரில் இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தையும், போராட்டத்தையும் எடுத்துச் செல்ல தீர்மானிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள்,வழக்கறிஞர்கள், மனித உரிமை அமைப்புகள், சமூக இயக்கங்கள், தலித் அமைப்புகள், ஒத்த கருத்துடைய அரசியல் கட்சிகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர் பிரச்சாரம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.

     துண்டறிக்கை விநியோகம், மாவட்ட வாரியாக அரங்கக்கூட்டங்கள், அறிவுசார் விவாதங்கள், அச்சு ஊடகம் மற்றும் காட்சி ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடல், கல்லூரி மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது உள்ளிட்ட பிரச்சார நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன.மேலும், இப்பிரச்சாரத்தில் யு.ஏ.பி.ஏ.வைப் போன்ற மற்றொரு கருப்புச்சட்டமான ‘ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தையும்’ (AFSPA) ரத்து செய்ய இந்த இயக்கம் மத்திய அரசை வலியுறுத்தும்.இந்தப் போராட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் தங்களை இணைத்துக் கொண்டு யு.ஏ.பி.ஏ. என்ற கருப்புச் சட்டத்திற்கெதிரான வலுவான போராட்டத்தை எடுத்துச் செலுமாறு ‘யு.ஏ.பி.ஏ. எதிர்ப்பு கூட்டியக்கம்’ கேட்டுக் கொள்கிறது.





கலந்து கொண்டவர்கள்:


1. வழக்கறிஞர். ஏ. முஹம்மது யூசுப், மாநில பொதுச்செயலாளர், (NCHRO)
2. பேரா. அ. மார்க்ஸ், தலைவர், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் (PUHR)
3. வழக்கறிஞர். சத்ய சந்திரன், சென்னை உயர்நீதிமன்றம்
4. வழக்கறிஞர். கேசவன், செயலாளர், அரசியல் கைதிகள் விடுதலைக்கான கூட்டமைப்பு (CRPP)
5. வழக்கறிஞர். உதய பானு, சென்னை உயர்நீதிமன்றம்
6. வழக்கறிஞர். எஸ். ரஜினிகாந்த், சென்னை உயர்நீதிமன்றம்,
7. கே.எஸ்.எம். இப்ராஹிம் (எ) அஸ்கர், மாநில பொருளாளர், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
8. வழக்கறிஞர். எம். ஜெய்னுலாப்தீன், சென்னை உயர்நீதிமன்றம்
9. வழக்கறிஞர். எஸ்.டி. முகம்மது முஸ்தகீம் ராஜா, சென்னை உயர்நீதிமன்றம்,
10. வழக்கறிஞர். நாகா ஷைலா, சென்னை உயர்நீதிமன்றம், சிவில் உரிமைகளுக்கான மக்கள் கழகம்
(PUCL)
11. வழக்கறிஞர். எஸ். முகம்மது அன்ஸர், சென்னை உயர்நீதிமன்றம்,
12. வழக்கறிஞர். டி. அசந்தாமணி, சென்னை உயர்நீதிமன்றம்,
13. வழக்கறிஞர். ஏ. ராவுத்தர் நயினா முகம்மது, சென்னை உயர்நீதிமன்றம்,
14. வழக்கறிஞர். ஏ. ராஜா முகம்மது, சென்னை உயர்நீதிமன்றம், (NCHRO, State Executive Committee Member)
15. முஹம்மது தம்பி, சட்டக்கல்லூரி மாணவர், திருச்சி (மாநில தலைவர், கேம்பஸ் ஃப்ரண்ட்)
16. வழக்கறிஞர். முஹம்மது ஃபைசல், சென்னை உயர்நீதிமன்றம்
17. வழக்கறிஞர். ஆர்.ஏ. சக்கூர், சென்னை உயர்நீதிமன்றம்
18. வழக்கறிஞர். எஸ்.கே. முஹம்மது சாகுல் ஹமீது, சென்னை உயர்நீதிமன்றம், (SDPI)
19. எஸ்.கே. சையது இல்யாஸ், சட்டக்கல்லூரி மாணவர், சென்னை
20. வழக்கறிஞர். பி. விமல் ராஜ், சென்னை உயர்நீதிமன்றம்

0 comments:

Post a Comment