Tuesday, December 25, 2012

ஹலால் உணவுகளை புறக்கணிக்க கோரி புத்த சாமியார்கள் ஆர்ப்பாட்டம்!

 20120507211138911    25 Dec 2012

     கொழும்பு: இலங்கையில் முஸ்லிம்களுக்காக விற்பனைச் செய்யப்படும் ஹலால் (இஸ்லாமிய ஷரீஅத் சட்டப்பட்டி உண்ண அனுமதிக்கப்பட்டது) முத்திரைக்குத்தப்பட்ட உணவுப் பொருட்களை புறக்கணிக்க கோரி புத்த சாமியார்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இலங்கை இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள எம்பிலிபிட்டிய நகரில் நேற்று(திங்கட்கிழமை) புத்த சாமியார்கள் பெருமளவில் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் உறுப்பினர்கள் பலரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர். அதேவேளையில் அக்கட்சியின் மேல்மாகாண சபை அமைச்சர் உதய கம்மன்பில கூறுகையில்,’ஹலால் சான்றிதழ் பெறவேண்டுமென்று வர்த்தக நிறுவனங்களை முஸ்லிம்கள் தரப்பிலிருந்து பலவந்தப்படுத்துகின்ற போக்குக்கு தமது கட்சி எதிர்ப்பு தெரிவிப்பதாகவும்’ அவர் தெரிவித்தார்.
 
     முஸ்லிம்களுக்கு ஹலால் உணவு உண்பதற்கு உரிமை இருப்பது போல ஹலால் இல்லாத உணவை உண்பதற்கான உரிமை மற்ற மதத்தவர்களுக்கு உண்டு என்றும் அமைச்சர் உதய கம்மன்பில வாதிட்டார்.
     அதேவேளை, நாட்டில் புத்த விகார்களுக்கு அருகில் ‘உரிய அனுமதியின்றி நிர்மானிக்கப்பட்டுள்ள முஸ்லிம் பள்ளிவாசல்கள் சட்டவிரோதமானவை’ என்றும் அவற்றை அகற்ற வேண்டுமென்றே தாம் போராட்டம் நடத்துவதாகவும் அவர் பி.பி.சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
     இந்நிலையில், இலங்கையில் அண்மைக் காலங்களாக முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சாரங்களும் போராட்டங்களும் நடந்துவருவது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சர் கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து முஸ்லிம் சிவில் சமூக பிரதிநிதிகள் சில தினங்களுக்கு முன்னர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதுக் குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சிலின் தலைவர் என்.எம்.அமீன் கூறுகையில்,’முஸ்லிம் மக்களின் சனத்தொகை, பள்ளிவாசல்கள் மற்றும் ஹலால் முத்திரைகளுக்கு எதிராக அண்மைக் காலங்களாக பல்வேறு பிரச்சாரங்களும் போராட்டங்களும் நடந்துவருவது தொடர்பாக நாங்கள் பாதுகாப்புச் செயலாளரின் கவனத்துக்கு கொண்டுவந்தோம். அதேவேளையில், இப்பிரச்சனை தொடர்பாக ஏனைய அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். எம்பிலிபிட்டிய பொதுச்சந்தையில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம் வர்த்தகர்கள் இருவர் முச்சக்கர வண்டியில் வந்த நபர்களால் நேற்று முன் தினம்(ஞாயிற்றுக்கிழமை) தாக்கப்பட்டுள்ளனர்’ என்று அமீன் தெரிவித்துள்ளார். நன்றி, தூது

0 comments:

Post a Comment